புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் அஹமட் அலி ஸைத் அல் ரஷ்டி (25) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஓமான் தூதுவர் இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை புதுப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தினார்.
முதலீட்டு ஊக்குவிப்பு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் இரு நாடுகளினதும் வர்த்தகக் குழுக்கள் விஜயங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு வழங்கிவரும் ஆதரவுகள் தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்த சபாநாயகர் அது தொடர்பில் தூதுவருக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.