சாலையில் கிடந்த 23 பவுன் நகை… தேடி ஒப்படைத்த பெரியவர்; நேர்மைக்கு குவியும் பாராட்டு!

“சாலையில் கேட்பாரற்று கிடக்கும் பத்து ரூபாய்த்தாள் கூட மனிதனின் மன நிலையை மாற்றிவிடும் தற்போதைய காலகட்டத்தில், இவரைப்போன்ற மனிதர்கள் வாழ்வதால்தான் நாட்டில் மழை பெய்கிறது. எல்லோரும் இவரைப்போல இருக்க வேண்டும்” என்று பெரியவர் ஒருவரை கொண்டாடித் தீர்க்கிறார்கள் உசிலம்பட்டி மக்கள்.

நகைகள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஒருவர் டூவீலரில் சென்றபோது தவறவிட்ட தங்க நகைகள், வங்கி டெபாசிட் பத்திரங்களை கண்டெடுத்து, அவரிடமே சேர்ப்பிக்க முயற்சிகள் எடுத்த பெரியவர் நாகராஜ்தான், அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியர் சின்னச்சாமி. இவர் கடந்த 21-ம் தேதி, 23 பவுன் நகை, ரூ 4 லட்சத்துக்கான பாண்ட் ரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை வங்கி லாக்கரில் வைப்பதற்காக பையில் வைத்து டூவீலரில் எடுத்து வந்துள்ளார்.

பெரியவர் நாகராஜ்

உசிலம்பட்டி பழைய தபால் நிலையத்தெருவில் வரும்போது அந்த பை கீழே விழுந்ததை கவனிக்காமல் சென்றுவிட்டார். பிறகு பையைக் காணாமல் எங்கெங்கோ தேடியுள்ளார்.

இந்நிலையில் அவ்வழியாக நடந்து வந்த பெரியவர் நாகராஜ், கீழே கிடந்த துணிப்பையை எடுத்து அதில் நகைகள், பாண்டு பத்திர ரசீதுகள், வங்கிக் கணக்கு புத்தகம் இருப்பதை பார்த்துள்ளார்.

இருவருடன் வங்கி மேனேஜர்

உடனே அந்தப் பையை எடுத்துக்கொண்டு கொஞ்சமும் தாமதிக்காமல் கூட்டுறவு வங்கிக்கு வந்து மேனேஜர் சிவக்குமாரிடம் பையை ஒப்படைத்தார்.

அது, தங்கள் வங்கி வாடிக்கையாளருடையது என்பதை தெரிந்துகொண்ட மேனேஜர், நகைப்பையை தவறவிட்டு பல இடங்களில் தேடிக் கொண்டிருந்த சின்னச்சாமியை உடனே அழைத்தார்.

அவர் முன்னிலையில் பொருள்கள் சரியாக இருக்கிறதா எனக் காட்டிவிட்டு கண்டெடுத்த பெரியவர் நாகராஜ் மூலம் நகைகள், பாண்ட் ரசீதுகளை பத்திரமாக ஒப்படைத்தனர். தவறவிட்ட ஆசிரியர் சின்னச்சாமி, நாகராஜுக்கு நன்றி தெரிவித்தார்.

நகைகள் ஒப்படைக்கப்படுகிறது

இந்த தகவல் உசிலம்பட்டி வட்டாரத்திலுள்ள மக்களுக்கு தெரிந்து முதியவர் நாகராஜை நேரிலும் சமூக ஊடகத்திலும் பாராட்டி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.