ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் தனப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தேஜ்யா (40). நேற்று இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த ஆம்புலன்சில் தேஜ்யாவை ஏற்றிய உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், தனப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் திடீரென நடுரோட்டில் நின்றுவிட்டது. டீசல் தீர்ந்ததால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றுவிட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கீழே இறங்கி ஆம்புலன்சை தள்ளிக்கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் மயக்க நிலையில் இருந்த தேஜ்யா ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நடு வழியில் நின்றது. இதனால், காலதாமதமாகி தேஜ்யா உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது. டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நடுரோட்டில் நின்றதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.