தமிழ் இருக்க இந்தி எதற்கு?… இந்தி திணிப்புக்கு எதிராக திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18ஆவது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயியான இவருக்கு வயது 85. இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி, ரத்னவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர் தி.மு.க. மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

மேலும், திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை இவர் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் திமுக அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். 

ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியிருந்தார்.

அதில்,  “மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதற்கு” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.