பிக்பாஸ் எலிமினேஷனால் ரச்சிதாவின் கணவர் ஹேப்பி

பிக்பாஸ் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனில் ரொமான்ஸ் ஜோடி என்று எதுவுமே இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக போராடிய அசல் கோலாறை பிக்பாஸ் வெளியே அனுப்பிவிட, அவர் விட்டுச் சென்ற ரொமான்ஸ் சீனை பிடிக்க பாடாய்பட்டுக் கொண்டிருக்கிறார் ராபர்ட் மாஸ்டர். அவரும் எத்தனையோ முறை ரச்சித்தாவை பிடிக்கும், அவர் மேல் எனக்கு கிரஷ் இருக்கிறது என தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க, அதனை சமயோசித்தமாக தட்டிக் கழித்துக் கொண்டு இருக்கிறார் ரச்சிதா. 

இது ராபர்ட் மாஸ்டருக்கு நன்கு தெரிந்தாலும், இருக்கும் வாய்ப்புகளை அத்தனையும் பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய ரொமான்ஸ் பக்கம், ஒருதலைக் காதலாவே இன்னும் சென்று கொண்டிருக்கிறது. அவரின் இந்த பகீரத முயற்சிகள் எல்லாம் வெளியில் இருக்கும் ரச்சிதாவின் கணவர் தினேஷ் கார்த்திக்கிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போதெல்லாம் திடீரென ஒருமை வார்த்தைகளை பயன்படுத்தியே ராபர்ட் மாஸ்டரை குறிப்பிடுகிறார்.

மேலும், ராபர்ட் மாஸ்டரின் முயற்சிகளுக்கு எல்லாம் ரச்சிதா விழும் ஆளில்லை, இத்தனை வருட நடிப்பு அனுபவத்தில் இதுமாதிரி எத்தனையோ புரோபசல்களை கடந்து வந்திருக்கிறார் என வெளிப்படையாக பேசினார். நிச்சயமாக ராபர்ட் மாஸ்டரை ரச்சிதா ஏற்றுக் கொள்ளவே மாட்டார் என அடித்துக் கூறினார் தினேஷ். மேலும், எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் ராபர்ட் மாஸ்டரை வாக்களிக்காமல் வீட்டைவிட்டு ரசிகர்கள் வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் இந்த கோரிக்கையை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது போலத்தான் தெரிகிறது. 

இப்போது வரை எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் மிக குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வார எலிமினேஷனில் அவர் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுவதால், வெளியே இருக்கும் ரச்சிதாவின் கணவர் செம ஹேப்பியில் இருக்கிறாராம். இப்போதைக்கு அவருடைய வேண்டுதல்கள் எல்லாம், இது நடந்துவிட வேண்டும் என்பதுதானாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.