வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

புவிநோக்கு செயற்கைகோள் இஓஎஸ்-06, 8 நானோ செயற்கைக் கோள்கள் உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு, ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அமெரிக்காவின் 4 செயற்கைக்கோள்கள் மற்றும் பூடானின் 2 செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராக்கெட்டுக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் செயல்பாடு திட்டமிட்டபடி சென்றுகொண்டுள்ளது. 8 நானோ செயற்கைக்கோள்களும் ஒவ்வொன்றாக திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டு வருவதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளை அவர் பாராட்டி பேசியதுடன், அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ வடிவமைத்த புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 (ஓசோன்சாட்-3) நவீன செயற்கைக்கோள், மொத்தம் 1,117 கிலோ எடை கொண்டது. ஓசோன்சாட் வரிசையில் அனுப்பப்படும் 4ஆவது செயற்கைக்கோள் அது. கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடா்ந்து கண்காணித்து தகவல்களை அளிக்க இஓஎஸ்-06 அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4 செயற்கைக்கோள்கள்), இந்தியா – பூடான் கூட்டு தயாரிப்பான ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2 செயற்கைக்கோள்கள்), பிக்சலின் ஆனந்த் உள்பட 8 நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் உடன் அனுப்பப்பட்டுள்ளன.

ராக்கெட் ஏவப்பட்டதன் வெற்றியை உறுதி செய்த இஸ்ரோ தலைவர் சோமநாத், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை அதன் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் பிஎஸ்எல்வி சி54 வெற்றிகரமாக நிலை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.