ஆன்லைன் சூதாட்டம் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. இந்த மசோதாவுக்கு முதலில் ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதா மீது விளக்கம் தருமாறு அரசுக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து அரசும் விளக்கமளித்து ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியது. ஆனால், இன்னும் ஆளுநர் தரப்பிலிருந்து மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதேசமயம், மசோதா நிறைவேற்றி இன்றுடன் ஆறு வாரங்கள் நிறைவடையும் நிலையில், ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் மசோதா இன்றுடன் காலாவதியாகவிருக்கிறது. இந்த நிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்றைக்குள் ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம், அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213 (2) (ஏ)-ன்படி சட்டப்பேரவை கூடிய நாளிலிருந்து ஆறு வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அக்டோபர் 17-ம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் ஆறு வாரங்கள் நிறைவடைவதால் அவசர சட்டம் காலாவதியாகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை மிகவும் அவசியம். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த ஆளுநரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.