தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் என்பவர் வசித்து வருகிறார். மனைவி பந்தனா மஜ்கி உடன் அப்பகுதியில் தங்கி இருந்து, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் இருவரும் வேலை பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு திருமணம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில், அஜய்குமார் மண்டலின் மனைவி பந்தனா ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 70 ஆயிரம் பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கணவர் அஜய் குமார் மண்டல் மனைவி பந்தனாவை கண்டித்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மனைவி பந்தனா நேற்று (நவ. 26) வேலைக்கு செல்லாமல் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பந்தனா உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் பலரும் உயிரிழப்பதும், பல குடும்பங்கள் சீரழிவதும் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைவிதித்து, அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இன்னும் அதற்கு ஆளுநர் ஒப்பதல் அளிக்காத நிலையில், அந்த சட்ட மசோதா இன்றுடன் காலாவதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. https://zeenews.india.com/tamil/topics/online-rummy