ஐஎஃப்ஏ மாத்திரைகள் சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி: மருத்துவமனையில் அட்மிட்

கவுகாத்தி: அசாமில் ஐஎஃப்ஏ மாத்திரைகள் சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்களுக்கு உள்ளூர் சுகாதாரத் துறையின் மூலம் இரும்பு-ஃபோலிக் அமில (ஐஎஃப்ஏ) மாத்திரைகள் வழங்கப்பட்டன.

அந்த மாத்திரைகளை மாணவர்கள் உட்கொண்டதால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், ‘பாட்சாகு பிளாக் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கெரானிபதர் பள்ளியின் 75 மாணவர்களுக்கும், நிமாலியா பள்ளியின் 26 மாணவர்களுக்கும்  இரும்பு-ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. வெறும் வயிற்றில் மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மாத்திரை கொடுத்த சில மணி நேரத்தில் மாணவர்கள் வாந்தி, வயிற்றுவலியால் அவதிப்படுவதாக புகார்கள் வந்தன. அதையடுத்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக சோனாரி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாந்தி, வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட 50 மாணவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்’ என்று கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.