கார்த்திகை தீபத்திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது

திருண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இன்று காலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

இந்த சிறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன், அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரம் அருகே பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளிய பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 67 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலையில் சந்திரசேகரர் மாலையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி வலம் வருவார்கள்.

இதற்கிடையில் வருகிற 30 ஆம் தேதி புதன்கிழமை வெள்ளி கற்பக விருட்சகம், வெள்ளி காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன. வருகிற 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனம், 2 ஆம் தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது. 3 ஆம் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்களில் உற்சவர்கள் வலம் வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.