குடியரசு தினம் விழா: சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் – இதுவே முதல்முறை!

நாடு முழுவதும் 74ஆவது குடியரசு தின விழா வருகிற ஜனவரி மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.

அந்த வகையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, 2023ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் அல் சிசி பங்கேற்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் அல் சிசிக்கு பிரதமர் மோடி முறைப்படியாக அழைப்பு விடுத்த கடிதத்தை கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று எகிப்திய அதிபரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்படைத்தார். அதனையேற்று, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் அல் சிசி பங்கேற்கவுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்கவுள்ளார். 2022-23 ஆம் ஆண்டு ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்கவுள்ளது. இதில், நட்பு நாடாக எகிப்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பழங்கால நாகரீகம், கலாசாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவு அடிப்படையில் இந்தியா – எகிப்து நாடுகள் சிறப்பான உறவை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1950 ஆம் ஆண்டு முதல் நட்பு நாடுகளின் தலைவர்களை குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைத்து வருகிறது. 1950ஆம் ஆண்டில் அப்போதைய இந்தோனேசிய அதிபர் சுகர்னோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 1952, 1953 மற்றும் 1966ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்கள் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக இல்லாமல் நடத்தப்பட்டன.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் 2007ஆம் ஆண்டிலும், முன்னாள் பிரான்ஸ் அதிபர்கள் நிக்கோலஸ் சர்கோசி 2008ஆம் ஆண்டிலும், பிராங்கோயிஸ் ஹாலண்டே 2016ஆம் ஆண்டிலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2015ஆம் ஆண்டில் குடியரசு தின சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் 10 நாடுகளின் தலைவர்கள் அடங்கிய முழுத் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) தலைமையும் கலந்து கொண்டது. 2020ஆம் ஆண்டில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

2021ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று அவர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

2022ஆம் ஆண்டில், இந்தியா-மத்திய ஆசிய உச்சி மாநாட்டிற்காக டெல்லிக்கு வரவிருந்த ஐந்து மத்திய ஆசிய குடியரசுகளின் தலைவர்களை குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைத்திருந்தது. ஆனால், இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக அவர்களது வருகை ரத்து செய்யப்பட்டது. இந்தியா-மத்திய ஆசிய உச்சி மாநாடும் கூட, காணொலி காட்சி மூலமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.