கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை இழுத்து சென்ற மாணவன் சடலமாக மீட்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பக்கிரி. இவரது மகன் திருமலை (18), ஐடிஐ மாணவர். இவர் நண்பர்கள் விஷ்ணு, பழனி ஆகியோருடன் நேற்று மதியம் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆற்றுக்குள் இறங்கி குளித்தபோது ஏதோ சத்தம் கேட்கவே விஷ்ணு, பழனி இருவரும் உடனடியாக கரைக்கு திரும்பினர். ஆனால், திருமலை தாமதமாக வந்து படி ஏறியபோது, அவர் வைத்திருந்த சோப்பு தவறி தண்ணீருக்குள் விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக மீண்டும் ஆற்றில் இறங்கினார்.  

அப்போது திருமலையின் காலை முதலை ஒன்று கவ்விபிடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் ஆகியோர் படகு, சின்ன துடுப்பு படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திருமலை சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.