சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத பக்தர்கள்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நடை திறந்த 16ம் தேதி மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சனிக்கிழமையான நேற்று 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும் சபரிமலையில் பக்தர்கள் மிக அதிக அளவில் குவிந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அதிகாலை 3 மணிக்கு முன் சபரிமலை வந்த பக்தர்களால் காலை 9 மணிக்குப் பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. நேற்று 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இதில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு எடுக்க வசதி: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக கேரளா முழுவதும் கோயில்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஓய்வு எடுக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 24 இடங்களில் இந்த வசதி உள்ளது. அடூர் ஏழம்குளம் தேவி கோயில், பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயில், மலையாளப்புழா தேவி கோயில், ஆரன்முளா பார்த்தசாரதி கோயில், கோழஞ்சேரி ஆல்தரை சந்திப்பு, பத்தனம்திட்டா நகரசபை மையம் உள்பட 24 இடங்களில் சபரிமலை பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.