சிறுநீரக கோளாறுடன் சிங்கப்பூர் பறந்த லாலு பிரசாத் யாதவ்… மகள் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடல்நல குறைவால் தொடர்ந்து அவதியுற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்தவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்ய இதனையடுத்து கடந்த மாதம் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

ஆனால் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கு சிபிஐ நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக அவர் 23 ஆம் தேதியே டெல்லி திரும்பினார்.

அங்கு அவரது மூத்த மகள் மிசா பார்தியின் வீ்ட்டில் தங்கியிருந்தார. இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள லாலுபிரசாத் யாதவின் இளைய மகள் ரோகிணி ஆச்சார்யா, தமது தந்தைக்கு சிறுநீரக தானம் அளிக்க முன் வந்தார். மருத்துவ பரிசோதனையில் ரோகிணியின் சிறுநீரகம் லாலுவுக்கு ஒத்துப்போனதையடுத்து, மிகப் பெரிய இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனை கடந்த சில வாரங்களுக்கு முன் தமது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார். தமது தந்தையின் மடியில் அமரந்திருக்கும் சிறு வயது கருப்பு, வெள்ளை புகைப்படத்தை தமது ட்விட்டர் பதிவில் ரோகிணி அண்மையில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ” என் அப்பாவுக்காக என்னால் எதையும் செய்ய முடியும். எல்லாம் நல்லபடியாக நடைபெற இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் எல்லோருக்காகவும் குரல் கொடுக்க என் தந்தை உடல்நலம் பெற்று திரும்ப வருவார்” என்றும் ரோகிணி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை லாலு பிரசாத் யாதவ் மீண்டும் பெற்று சிங்கப்பூர் சென்றுள்ளார்ய அங்கு அவருக்கு ஓரிரு நாட்களில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வெளியே வரும் காட்சியும், அவரது காலை தான் தொட்டு வணங்கும் உணர்ச்சிகரமான தருணமும் அடங்கிய வீடியோவை ரோகிணி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹிந்தி மொழியில் இடம்பெற்றுள்ள அந்த பதிவில், “, ஒவ்வொருவருக்கும் அவர்களின் தந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சிகரமான தருணம்தான். இக்கட்டான சூழ்நிலைகளை தகர்த்தெறிந்து எப்படி வெளியேற வர வேண்டும் என்று என் தந்தை (லாலு பிரசாத் யாதவ்) எனக்கு கற்றுகொடுத்துள்ளார்” என்று ரோகிணி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

. முன்னாள் ரயில்வே துறை அமைச்சரான லாலு, கால்நடை தீவன வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு, சிகிச்சைக்காக டெல்லி மற்றும் ராஞ்சியில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு சிங்கப்பூரில் விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.