பாபா ரீ ரிலீஸ் : ரஜினியை தூண்டிவிட்ட காந்தாரா

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2003ம் வருடம் அவரே கதை, திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்த படம் பாபா. அவருடைய ஆஸ்தான இயக்குனரான சுரேஷ்கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஆன்மீகம், மந்திரம், நாத்திகம் என எல்லாவற்றையும் கலந்து இந்தப்படம் உருவானதுடன் வித்தியாசமான ஒரு கெட்டப்பிலும் நடித்திருந்தார் ரஜினிகாந்த். ஆனாலும் இந்த படம் வெளியான சமயத்தில் தோல்விப்படம் என்கிற பெயரை சம்பாதித்தது.

இந்தப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை சரி செய்வதற்காக அவர்களை அழைத்து, ரஜினிகாந்த் நஷ்ட ஈட்டை திருப்பிக் கொடுத்த நிகழ்வும் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடந்தது. அதேசமயம் இந்தப்படம் வெளியான சமயத்தில் அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியதால் பல திரையரங்குகளில் இந்தப் படத்தை ஓட விடாமல் தடுக்கும் வேலைகளும் நடந்தன. குறிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு சரியான முறையில் போய் சேரவில்லை என்கிற வருத்தம் ரஜினிக்கு ரொம்பவே இருந்தது.

இந்த நிலையில்தான் தற்போது இந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீசுக்கு தயாராகி உள்ளது. குறிப்பாக படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக சொல்லப்பட்ட படத்தின் ரன்னிங் டைம் குறைக்கப்பட்டு, ரீ எடிட்டிங் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, சிவாஜி உள்ளிட்ட சில படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸாகி இருந்தாலும் அது அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் விருப்பமாக இருந்தது. அதேபோல இப்போது பாபா ரிலீஸ் செய்யப்படுவதும் இந்த படத்தின் தயாரிப்பாளரான ரஜினியின் விருப்பம் தான் என்கிற தகவலை படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் பாபா படத்தின் ஹார்டு டிஸ்கை கொடுத்து பார்க்கும்படி கூறியதாகவும் அதன்பிறகு தன்னை வீட்டிற்கே அழைத்து இந்த படத்தை இப்போது மீண்டும் ரிலீஸ் செய்யலாம் என்கிற ஐடியாவையும் கூறினாராம். அதற்கு காரணமாக, தற்போது சமீபகாலமாக பிரம்மாஸ்திரா, காந்தாரா என்கிற பேண்டஸி படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்றும், அதுமட்டுமல்ல பாபா படம் வெளியான பிறகு அதன் ஒளிபரப்பு உரிமை யாருக்குமே கொடுக்கப்படாததால், இதுவரை எந்த ஒரு பிளாட்பார்மிலும் பாபா படத்தை இன்றைய இளைஞர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்று கூறிய ரஜினி, இந்த சமயத்தில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிட்டால் இன்றைய இளைஞர்களுக்கும் இந்த படத்தைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினாராம்.

அதுமட்டுமல்ல சுரேஷ் கிருஷ்ணாவிடம் விவாதித்து இந்த படத்தில் தொய்வு ஏற்படும் காட்சிகள் என தாங்கள் இருவரும் ஒன்றாக கருதிய காட்சிகளை நீக்கிவிட கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. இந்த ரீ-ரிலீசில் இதற்குமுன் பெறத்தவறிய வெற்றியை பாபா பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.