தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மனோ தங்க ராஜ் குழித்துறை அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுக அரசு மாத சார்பு தன்மை மற்றும் நான்கு வழி சாலை திட்டங்களை பொறுத்தவரையில் அரசு முரண்பாடாக செயல்படுகிறது என்ற கருத்து கூறியிருப்பதை பொறுத்த வரையில், திமுக மதசார்பு தன்மையில் உறுதியாக செயல்படும். நான்கு வழி சாலை திட்டம் பரந்தூர் விமான நிலைய திட்டங்களை பொறுத்த வரையில் மக்களுக்கு எதிராக இந்த அரசு செயல் படாது, முதல்வர் அதற்க்கு உரிய நடவடிக்கை எடுப்பார்.
அமைச்சர் ஐ. பெரியசாமியை நிதியமைச்சர் விமர்சித்ததாக எடுத்து கொள்ள கூடாது, நிதி அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த 10 வருடங்களாக பல்வேறு துறைகளின் கட்டமைப்புகள் சிதைந்திருந்தது, அது சரி செய்யப்பட்டு வருகிறது. பெரியசாமியை அமைச்சர் விமர்சித்தார் என்று கூற முடியாது, இது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகள் கூட்டத்தில் எனது மகன் கலந்து கொண்டது தொடர்பாக பாஜக கூறுவதை பொறுத்த வரையில் அமைச்சர் என்கிற முறையில் அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் நடத்தி வருகிறேன்.
சுற்றுலா மாளிகையில் யாராவது ஆய்வு கூட்டத்தை நடத்துவார்களா? அன்று நடந்தது சுற்றுலா மாளிகையில் சில அதிகாரிகளுடான வெறும் கலந்துறையாடல் தான். பாஜகவினருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனுக்கும் என்னையோ திமுக அரசையோ விமர்சிக்க எதுவும் இல்லாததால் இது போன்ற பொய் வதந்திக்களை பரப்பி வருகிறார்கள். பாஜகவினருக்கு வதந்திக்களை பரப்பி வருவது தான் வேலை என அவர் தெரிவித்தார்.