மிரட்ட ரெடியாகும் ரெண்டு புயல்கள்… அடுத்த பெருமழைக்கு ரெடியாகும் தமிழகம்!

வடகிழக்கு பருவமழை இரண்டு முறை தமிழகத்தில் வெளுத்து வாங்கிவிட்டது. இதை ஓரளவு சமாளித்துவிட்ட நிலையில் அடுத்த பெருமழை எப்போது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. ஏனெனில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது வலுப்பெற்று தரைப் பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடற்பகுதியிலேயே நிலை கொண்டு வலுவிழந்தது.

இரண்டு புயல் சுழற்சிகள்

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் துளி கூட மழையை பார்க்க முடியவில்லை. இந்த சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி கவனம் பெற்றுள்ளது. அதில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புயல் சுழற்சி காணப்படுகிறது. இதேபோல் வங்கக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் மற்றும் அந்தமான் கடலின் வடக்கே மற்றொரு புயல் சுழற்சி நிலை கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு…

இந்த இரண்டு புயல் சுழற்சிகள் காரணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் லேசானது முதல் பரவலானது வரை மழை பெய்யக்கூடும். கேரளா, கடலோர மற்றும் கர்நாடக மாநிலத்தின் தெற்கு உட்புறப் பகுதிகளில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் லேசானது முதல் பரவலான மழை பெய்யும்.

வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்றைய தினம் (நவம்பர் 27) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழையை காணோம்

நவம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கட்டப்பாக்கம் (காஞ்சிபுரம்), சீர்காழி (மயிலாடுதுறை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), பேராவூரணி (தஞ்சாவூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) தலா 1 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.

அதேசமயம் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பெரிதாக எங்கேயும் மழை பெய்யவில்லை. இதேநிலை தான் இன்றும் காணப்படுகிறது. நேற்று மாலை வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில், சென்னையில் லேசாக வெயில் எட்டிப் பார்க்க தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.