அதானியின் கட்டுமானத் திட்ட போராட்டத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் காயம்

விழிஞ்சம்: அதானியின் துறைமுக திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையிலான மோதலில் 80 பேர் காயமடைந்துள்ளனர். அதானி குழுமத்திற்கு எதிராக இதே போன்ற போராட்டங்கள் ஆஸ்திரேலியாவிலும் நடைபெற்றுள்ளது. ஆதானியின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தில் கார்பன் வெளியேற்றம் மற்றும் கிரேட் பேரியர் ரீஃபின் சேதம் குறித்து கவலையடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடத்திய போராட்டங்களினால், அந்த கட்டுமானம் ஆறு ஆண்டுகள் தாமதமானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கேரள மாநிலத்தில் அதானிக்கு சொந்தமான $900 மில்லியன் மதிப்புள்ள துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான அதானின் கட்டுமானப் பணிகள் தொடபாக போராட்டங்கள் தொடங்கி இருக்கிறது.  

விழிஞ்சம் துறைமுகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை போராட்டக்காரர்கள் நிறுத்தினார்கள். காவல்துறையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக 80 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்.

சமீபத்திய மோதலில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காவல்நிலையத்திற்குள் நுழைந்து உத்தியோகபூர்வ வாகனங்களை சேதப்படுத்தியதாக காவல்துறை கூறுகிறது. 

கட்டுமானப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, கட்டுமான வாகனங்களுக்கான நுழைவாயிலை கிராம மக்கள் தடுத்ததால், கட்டுமானப் பணிகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், வழி மறித்த பல போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் போராட்டக்காரர்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 36 போலீஸ் அதிகாரிகள் பலத்த காயம் அடைந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்த கேரள உயர்நீதிமன்றம்,  கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும் என பலமுறை உத்தரவிட்டது. இருந்த போதிலும்  கட்டுமானத்தை அனுமதிக்க மறுத்து மக்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இதுவரை தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை, ஆனால் அனைத்து சட்டங்களுக்கும் இணங்கியே, துறைமுக கட்டுமானம் நடைபெறுவதாக நிறுவனம் கூறுகிறது. இயற்கையான காரணங்களால் ஏற்பட்ட மண் அரிப்பு தான் சிக்கல் வேறு ஒன்றுமில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.