சூரத்,
182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 1 ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும் 5 ஆம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சூரத்தில் வைர வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறகு பேசியதாவது: நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் படி ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.
இளைஞர்கள், பெண்களின் ஆதரவு ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் உள்ளது. உங்களின் குடும்பத்தினரையும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்துங்கள் என இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். பணவீக்கமும் வேலை வாய்ப்பு இன்மையும் மக்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. குஜராத்தில் வைர வியாபாரிகள் ஆம் ஆத்மிக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக மீதான அச்சத்தால் அவர்கள் இதை வெளிப்படையாக சொல்வதில்லை” என்றார்.