மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில், பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை என மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அரசு கொடுக்கும் வசதிகளைப் பெற, மாணவர்கள் சரியான ஆதார் பதிவு வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. விரைவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு பெறும் மாணவர்களின் விவரங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். அரசு உத்தரவின்படி 2013 ஜனவரி முதல் இந்த விதியை அமல்படுத்துவதுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மாநிலத்தில் ஆதார் அட்டை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை 59 லட்சம் என்று கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
மாநில அரசின் தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் அரசு உதவி பெறும் மற்றும் உதவிபெறாத பள்ளிகளில் தற்போது 23,313,762 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில் 1,955,515 (8 சதவீதம்) குழந்தைகளிடம் ஆதார் அட்டை இல்லை. மீதமுள்ள 21,358,247 குழந்தைகளில் ஆதார் பதிவு செய்தவர்களில், 4,001,250 (18 சதவீதம்) பேருக்கு சரியான ஆதார் அட்டை இல்லை.
எனவே பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், வசதிகளைப் பெற, மாணவர்களிடம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்.
மதிய உணவு திட்டம் என்பது இந்தியாவில் மாணவர்களுக்கான பிரத்யேக மற்றும் பிரபலமான உணவு திட்டம் என்பதுடன், மாணவர்களை பள்ளிக்கு வரவைக்கும் ஒரு அற்புதமான மந்திரக்கோலாக செயல்படும் ஒன்று என்றால் அது மிகையாகாது. நாடு முழுவதும் பள்ளி வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது மதிய உணவுத் திட்டம்.
பள்ளிகள் இயங்கும் நாட்களில் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம், பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புற அல்லது பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிய உணவுத் திட்டத்தை ஆதாருடன் இணைக்கும் முடிவு என்பது, பள்ளிக் கல்வியில் பல காரணிகளை பாதிக்கும் சாத்தியம் உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்படும் ஆசிரியர்களின் பணியிடங்கள் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் அடிப்படையிலானது. இந்த நடவடிக்கை ஆசிரியர் ஆட்சேர்ப்பு கணக்கீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இரண்டாவதாக, ஆதார் அட்டை இல்லாத மாணவர்கள் 2023 ஜனவரி முதல் மதிய உணவு, இலவசச் சீருடை வழங்குவது போன்ற பல பலன்களைப் பெற முடியாது.
“சரிபார்ப்பு செயல்பாட்டின் போது, 1.9 மில்லியன் மாணவர்களிடம் ஆதார் அட்டை இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். தவறான ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் போன்ற விவரங்களில் தவறுகள் உள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் இதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு காலக்கெடுவை வழங்கியுள்ளோம், இதனால் ஒவ்வொரு குழந்தையும் பள்ளி பயன்களைப் பெற முடியும், ”என்று மாநில கல்வித் துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த அறிக்கையின்படி, புனே, தானே மற்றும் மும்பை போன்ற மாவட்டங்களில் ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தந்த பள்ளிகளுக்கு இந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வரை போர்ட்டலில் ஆதார் புதுப்பிப்பை முடிக்க அவகாசம் உள்ளது.