கடைசி ஒருநாள் போட்டியும் மழையால் ரத்து…! 1-0 என தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

கிறிஸ்ட்சர்ச்,

இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் 12.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்ட நிலையில் மழையால் பாதியில் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது . இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதில் சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் இழந்த வண்ணம் இருந்தன. இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் 28 ரன்னும், கில் 13 ரன்னும், அடுத்து வந்த அய்யர் 49 ரன்னும், பண்ட் 10 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதற்கிடையில் களம் இறங்கிய சுந்தர் ஒரு புறம் நிலைத்து நின்று ஆடினார். பொறுமையாக ஆடிய சுந்தர் அரைசதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 47.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சுந்தர் 51 ரன்கள் அடித்தார். இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது.

தொடக்க ;வீரர்களாக டெவன் கான்வே ,பின் ஆலன் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பின் ஆலன் அரைசதம் அடித்தார்.தொடக்க விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் பின் ஆலன் 57 ரன்களில் வெளியேறினார்.நியூசிலாந்து அணி 1 விக்கெட்டுக்கு 104 18 ஓவர்களில் ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதனால் 1-0 என நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.