கேரளாவில் அவதார் 2 வெளியாகாது : தியேட்டர் உரிமையாளர் சங்கம் போர்க்கொடி

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அவதார் 2 என்கிற பெயரில் வெளியாக உள்ளது. வரும் டிசம்பர் 16ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னிந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இந்த படத்திற்காக தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிற சர்ச்சை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, கேரளாவில் இந்த படத்தை திரையிடப்போவதில்லை என போர்க்கொடி தூக்கியுள்ளது திரைப்பட உரிமையாளர்கள் சங்கம்.

காரணம் இந்த படத்தின் கேரள விநியோகஸ்தர்கள் முதல் வாரம் வசூலாகும் தொகையில் வழக்கமாக தங்களுக்கு தரப்படும் பங்குத்தொகையை விட 5 சதவீதம் அதிகமாக தரவேண்டும் என நிபந்தனை மிதித்து உள்ளார்களாம். ஆனால் எப்போதும் போல 55 சதவீதம் மட்டுமே தர முடியும் என தியேட்டர் நிர்வாகத்தினர் உறுதியாக கூறிவிட்டனர். ஆனால் விநியோகஸ்தர்கள் விடாப்பிடியாக அதிக தொகை கேட்பதால், அவதார்-2 படத்தை வெளியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார்களாம் திரையரங்க உரிமையாளர்கள். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் இருப்பதால் இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.