சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 4 லட்சம் கை அறுவை சிகிச்சைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 4.09 லட்சம் கை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக கை அறுவை சிகிச்சை உயர்சிறப்பு மேற்படிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கை அறுவை சிகிச்சை துறையில், கை துண்டிக் கப்பட்டவர்களுக்கு, வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, குணமடைந்து வீடு திரும்ப இருந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளைஅங்கி அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

வடசென்னை தொகுதி எம்பி கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) சாந்திமலர், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பு.பாலாஜி, துணை டீன் ஜமிலா, கை அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவில் முதன்முறையாக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இப்படிப்பு இதுவரை இருந்தது. ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1971-ம் ஆண்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைதொடங்கப்பட்டது. 1974-ம் ஆண்டு கை அறுவை சிகிச்சைக்கென20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 2018-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் கை மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக இங்கு செய்யப்பட்டது.

இந்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைக்கென ரூ.4.7 கோடி செலவில் மூன்றாம் தளம் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உயர்தர மருந்துகளுக்கென ரூ.4.2 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திலேயே அவசர கை அறுவை சிகிச்சை செய்யப்படும் ஒரே அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையாகும். இங்கு இதுவரை 4,09,527 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையின் நுண்ணுயிரியியல் துறையில் கரோனாகாலத்தில் 11 லட்சம் ஆர்டி-பிசிஆர்என்ற கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. என்றுஅமைச்சர் தெரிவித்தார்.

லிப்ஃடில் சிக்கிய அமைச்சர்: பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையின் 3-வது தளத்தில் இருந்து தரை தளத்துக்குச் செல்ல லிப்ஃடில் ஏறினார்.அவருடன் மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். அப்போது, திடீரென்று லிப்ஃட் பாதியில் நின்றுவிட்டது. இதனால் அனைவரும் செய்வதறியாமல் திகைத்தனர். லிப்ஃட் சரிசெய்ய ஆபரேட்டர் முயற்சி செய்தார். ஆனால், முடியவில்லை.

பின்னர், லிப்ஃட் ஆபரேட்டர் உதவியுடன், பாதியில் நின்ற லிப்ஃட்கதவைத் திறந்து, அமைச்சர், பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவர்கள் வெளியேறினர்.

இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “லிப்ஃட் பிரச்சினை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்தது.அங்குள்ள 24 லிப்ஃடையும் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்டான்லி மருத்துவமனையிலும் பழுதடைந்த லிப்ஃட்கள் மாற்றப்பட்டு, முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.