குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு பதிவேற்றம் செய்த திருச்சி வியாபாரி வீட்டில் சிபிஐ சோதனை: கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது அம்பலம்

திருச்சி: பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வெளிநாடுகளுக்கு பதிவேற்றம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த மணப்பாறை வியாபாரி ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(60). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா(44). விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் ஓராண்டு வேலை பார்த்து வந்தார்.

இதைதொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பலவிதமான வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து அதன்மூலம் பல கோடி சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் மத்திய உளவுப்பிரிவுக்கு தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் உள்ள பல வெப்சைட்டுகளுக்கு ராஜா பதிவேற்றம் செய்துள்ள பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் குறித்த தகவல்களை சிபிஐக்கு மத்திய உளவு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராஜாவின் இணையதள முகவரி மற்றும் அவர் பதிவேற்றம் செய்துள்ள வெப்சைட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்தனர். இதில் ராஜா, பெண் குழந்தைகளின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகள் (அயல்நாடு செயல்பிரிவு அதிகாரிகள்) முடிவு செய்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினர். இதைதொடர்ந்து சுப்பிரமணியன் வீட்டில் சோதனை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியது.

அதன்பேரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியில் உள்ள சுப்பிரமணியன் வீட்டுக்கு இன்று காலை 8 மணிக்கு 4 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் காரில் வந்தனர். பின்னர் சுப்பிரமணியன் வீட்டுக்குள் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவர் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் மற்றும் வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் உபகரணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்று மதியம் வரை தொடர்ந்து நடந்தது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், இளம் சிறார்களின் ஆபாச படங்கள், வீடியோக்களை மொபைல் செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து ராஜா பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இந்த வீடியோக்கள் பதிவேற்றத்தில் ராஜாவுக்கு உடந்தையாக இருந்தது யார், வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இதற்கு ஏஜென்டாக இருந்தது யார் என்ற பல்வேறு கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு வாழ்க்கை…
லண்டனுக்கு சென்று வந்த ராஜா, விவசாயத்தை கைவிட்டு விட்டு திருப்பூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். இவர் வெளிநாட்டில் வேலை செய்தபோது ஏற்பட்ட பெரும் தொடர்பை பயன்படுத்தி கொண்டு திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்தவாறே இளம்சிறார்களின் புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ராஜா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.