மோடி பிரதமரான 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு: பாஜகவை விமர்சித்த தெலுங்கானா முதல்வர் மகள்

ஹைதராபாத்: மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களின் ஆட்சியை கவிழ்த்துள்ளதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளும் எம்.பி.யுமான கவிதா விமர்சித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயரை சேர்த்து அமலாக்கத்துறை நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தெலுங்கானாவில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா; பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

பிரதமராக பதவி வகித்த 8 ஆண்டுகளில் மட்டும் 9 மாநிலங்களில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுகளை கவிழ்த்து பாஜக முறையற்ற விதமாக ஆட்சி அமைந்துள்ளதாக அவர் சாடியுள்ளார். பாரதிய ஜனதா ஆட்சியில் இது நாம் பார்க்கும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி சுமூகமாக ஆட்சி செய்து வரும் சூழலில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சூழ்ச்சியில் ஈடுபட்டதாகவும், இதனை மக்கள் அறிந்துள்ளதாகவும், கவிதா குற்றம் சாட்டினார்.

எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும், பிரதமர் வருவதற்கு முன்பே அமலாக்கத்துறை வந்து விடுகிறது. தங்களை பிரதமர் மோடி சிறையில் அடைத்தாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றும், பாஜக அரசின் தோல்விகளை வெளிக்கொண்டு வருவோம் என்றும் கவிதா சூளுரைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.