பண மோசடி வழக்கு: சத்தீஸ்கர் முதல்வரின் துணை செயலாளர் அதிரடி கைது!

சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகால் துணை செயலாளர் சௌமியா சௌராசியாவை, அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பெகால் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பூபேஷ் பெகாலின் துணை செயலாளராக இருப்பவர், சௌமியா சௌராசியா.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கொண்டுச் செல்லப்படும் ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும், தலா, 25 ரூபாய் சட்ட விரோதமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதில், மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக, அண்மையில் வருமான வரித் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்த அக்டோபர் மாதம், ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய் மற்றும் மேலும் இருவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று, நிலக்கரி வரி வதிப்பு முறைகேடு தொடர்பான சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகால் துணை செயலாளர் சௌமியா சௌராசியாவை, அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு, சௌமியா சௌராசியாவை மருத்துவப் பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். விரைவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.