ஈரோடு: மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாலக்கரை பெண் தலைமை ஆசிரியரை பெருந்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 35 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ, மாணவியரும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கடந்த 21ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மாணவர், தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்தேன். அப்போது கொசு கடித்ததாகவும் மருத்துவரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் தாயார், இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்திரவிட்டார். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன் பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பள்ளியில் படிக்கும் 6 மாணவர்களை தலைமை ஆசிரியை கீதாராணி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணியை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாணவரின் தாய் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியை கீதாராணி மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் தலைமை ஆசிரியர் பெருந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் தலைமை ஆசிரியை பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் தலைமை ஆசிரியை கீதாராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.