ஜெர்மனிக்கான பயணம்: ஒப்பந்தம் கையெழுத்து| Dinamalar

புதுடில்லி இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே, கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு களில் மக்கள் பரிமாற்றத்தை அதிகரிக்கும் வகையில், ‘விசா’ முறைகளில் சலுகை கள் அளிக்கும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அனலீனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை புதுடில்லியில் அவர் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, உக்ரைன் போர், ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் உட்பட, பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளில், இரு நாடுகளுக்கு இடையே மக்கள் பயணிப்பதை எளிமையாக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில் சலுகை விலையில் இந்தியா வாங்கி வருகிறது. இதற்கு, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த சந்திப்புக்குப் பின், ஜெய்சங்கர் கூறியதாவது:

நம் நாட்டின் நலனுக்காக, ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் வாங்குகிறோம்.

இந்தாண்டு பிப்., – நவ., காலகட்டத்தில், ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் அதிகளவில் பெட்ரோலியப் பொருட்கள் வாங்கிஉள்ளது.

அதிகளவில் இறக்குமதி செய்த அடுத்த ௧௦ நாடுகளின் மொத்த அளவைவிட அதிகமாக ஐரோப்பிய யூனியன் வாங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.