சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட வாய்ப்பு

டெல்லி: கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருளை 85 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதால் சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் வெகு விரைவாக இந்தியாவில் எதிரொலிக்கும். பெருமளவு எண்ணெய்யை ஈராக், அரேபியா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 120 டாலரில் இருந்து 90 டாலராக குறைந்தது.

ஒரு வாரமாக 90 டாலருகே விற்பனை செய்யப்படும் சூழலில் இந்த விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்படலாம் என்று தெரிகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முடிவு ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது. கடந்த முறை கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.