திருவண்ணாமலை மகா தீபம்… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 6) அதிகாலை பரணி தீபம் மற்றும் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக 4,500 கிலோ ஆவின் நெய், 1,150 மீட்டர் காடா துணியால் செய்யப்பட்ட திரி, ஐந்தரை அடி உயரமுள்ள கொப்பரை ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவர். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம், மகா தீபம் என மூன்றையும் இந்த நாளில் ஒன்றாக பார்க்க முடியும். இதை நேரில் கண்டால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை. எனவே பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வருவர். இதையொட்டி 2,700 சிறப்பு பேருந்துகள், 43 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தீப திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. கோயில், பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமத்தை சந்திக்கக் கூடாது என்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இன்று (டிசம்பர் 6) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.