வரும் 15ல் சர்வதேச திரைப்பட விழா ; 51 நாடுகள் பங்கேற்பு ; 102 படம் வெளியீடு

சென்னை: சென்னையில் 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் 15ல் துவங்கி, 22ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 51 நாடுகளில் இருந்து தமிழில் 12 படங்கள் உட்பட 102 படங்கள் திரையிடப்படுகிறது.

தமிழக அரசின் ஆதரவுடன், 'இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், பி.வி.ஆர்., சினிமா' உடன் இணைந்து, 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. விழாவை வரும் 15ல், அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்கிறார். வரும் 22ம் தேதி வரையிலான திரைப்பட விழா, சென்னையில் உள்ள பி.வி.ஆர்., மல்டிபிளக்ஸ் தியேட்டர் உட்பட பல இடங்களில் நடக்க உள்ளது.

விழாக்குழுவினர் அளித்த பேட்டி : திரைப்பட விழாவில் மொத்தம் 51 நாடுகளில் இருந்து, 102 படங்கள் திரையிடப்படுகிறது. இந்திய அளவிலான திரைப்பட பிரிவில், கடைசி விவசாயி, மாலை நேரமல்லிப்பூ, போத்தனுார் தபால் நிலையம் என, மூன்று தமிழ் படம் உட்பட, 15 படங்கள் இடம்பெறுகின்றன.

தமிழ் படங்களுக்கான பிரிவில், ஆதார், பிகினிங், பப்பூன், கார்கி, கோட், இறுதிபக்கம், இரவின் நிழல், கசட தபற, மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, யுத்த காண்டம் என, 12 படங்கள் திரையிடப்பட உள்ளன.

'ஆஸ்கர், கேன்ஸ், கோல்டன் லயன்' விருது விழாவில் திரையிடப்பட்ட படங்கள், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இம்முறை AEIOU என்ற ஜெர்மன் படம், பெண்களுக்கு என பிரத்யேக காட்சியாக திரையிடப்படுகிறது.

இம்முறை, தமிழுக்கு மொத்தம் ஒன்பது விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. கொரிய குடியரசு உள்ளிட்ட துாதரகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த படங்களும் திரையிடப்படுகிறது. எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லுாரி மாணவர்கள் தயாரித்த ஒன்பது குறும்படங்களும் திரையிடப்பட உள்ளது. முதன்முறையாக ஒரியா, சமஸ்கிருத மொழி படங்களும் திரையிடப்படுகிறது.

திரைப்பட விழாவின் மற்றொரு முக்கிய அம்சமாக, அவிச்சி கல்லுாரி ஏற்பாட்டில், திரை மற்றும் இலக்கியத் துறையை சேர்ந்தவர் பங்கேற்கும், 12 கலந்தாய்வு நிகழ்வுகள் நடக்கிறது. இதில், இரவின் நிழல், பீஸ்ட், பொன்னியின்செல்வன் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.