கும்பகோணத்தில், காவி உடை அணிந்து, நெற்றியில் விபூதி பட்டையும் குங்குமமும் வைத்துள்ள அம்பேத்கர் உருவ படம் கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர், காவி உடை அணிந்து, நெற்றியில் விபூதி பட்டையும் குங்குமமும் வைத்துள்ள அம்பேத்கர் உருவ படம் கொண்ட போஸ்டர்களை கும்பகோணம் முழுவதும் ஒட்டியிருந்தார். மேலும் அந்த போஸ்டரில், ‘காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்’ என அச்சிடப்பட்டிருந்தது.
காவி உடை, விபூதி பூசி, குங்குமம் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்பட போஸ்டர் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், காவி உடை, விபூதி, குங்குமம் வைக்கப்பட்டு அம்பேத்கர் உருவப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.