நேற்று வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் புயல் சின்னமாக வலுவடையக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். நாளை காலை புயலாக வலுப்பெறும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இன்று காலை சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர்,காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு 50 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.