இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கட்சி; 38 தொகுதிகளில் முன்னிலை…

சிம்லா: இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி  முன்னிலை வகித்து வருகிறது. காலை 11மணி நிலவரப்படி 38 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச மாநிலத்தில்  தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆட்சியை பிடிக்க 35 இடங்கள் தேவை. அங்கு பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. பாஜகவும், காங்கிரசும் இரு இடங்கள் வித்தியாசத்திலேயே இழுபறியாக முன்னிலையில் தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், இன்று பாஜக ஆளும் மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து இருந்தன. அதுபோலவே கடும் போட்டி நிலவி வருகிறது. தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.

மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 38 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான 35 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது. மீதமுள்ள மூன்று இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்கு https://results.eci.gov.in/ இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.