உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்

இந்த வருட துவக்கத்தில் ஹிந்தியில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் என்கிற படம் காஷ்மீரில் பண்டிட்டுகள் அனுபவித்த துயரம் குறித்து பேசி மிகப்பெரிய பரபரப்பை அரசியல் அரங்கில் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்தப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அப்போது டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் என்பவர், தான் விசாரித்த கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவிக்கும் விதமாக வழங்கிய தீர்ப்பு குறித்து தனது விமர்சனத்தை பதிவிட்டு இருந்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இவர் செயல்பட்டதாக கூறி இவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. தற்போது சம்பந்தப்பட்ட அந்த நீதிபதி ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கிறார். இந்த நிலையில் அந்த வழக்கு குறித்த விசாரணை டில்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது, அப்போது விவேக் அக்னிகோத்ரி சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், நீதிபதி முரளிதர் மீது தான் தெரிவித்த கருத்துகளுக்காக தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக விவேக் அக்னிகோத்ரி அபிடவிட் மூலமாக தெரிவித்துள்ளார் என்று கூறினார். மேலும் அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அந்தக் கருத்துக்களையும் நீக்கிவிட்டார் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் இப்படி குற்றத்தை உணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்தை ஒரு அபிடவிட் மூலம் தெரிவிக்க முடியாது. இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவிப்பதில் அவருக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதை தொடர்ந்து விவேக் அக்னிகோத்ரி நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவிப்பாரா அல்லது இத்துடன் வழக்கு முடித்து வைக்கப்பட்டு விட்டதா என்பது குறித்த விவரங்கள் இனிமேல் வெளியாகும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.