
திருப்பதி அருகே, திருமண கோஷ்டி சென்று கொண்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள செட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் திருமண விழாவில் பங்கேற்க டிராக்டரில் சென்றனர். பூத்தனப்பட்டு அருகே வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்தவர்கள் அடியில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில், 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். டிராக்டர் கவிழ்ந்ததை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
விபத்து பற்றி தகவல் அறிந்த பூத்தலப்படு போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.