Mandous Cyclone : வலுவடைந்தது மான்டோஸ் புயல் – கனமழைக்கு வாய்ப்பு… பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருந்தது. இந்நிலையில், அது நேற்றிரவு 11.30 மணியளவில் மான்டோஸ் புயலாக வலுவடைந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மான்டோஸ் புயல் காரணமாக வரும் 10ஆம் தேதிவரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர்,  பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில்,”வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மான்டோஸ் புயலாக வலுவடைந்து, காரைக்காலில் இருந்து 560 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

மேலும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – புதுவை மற்றும் ஆந்திர கடற்கரையை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 9ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது, மணிக்கு 65-75 கி.மீ., வேகத்தில் இருந்து, 85 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வித வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றம் அதிகமாக இருக்குமென்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, திருவாரூரில் பள்ளிகளுக்கும், தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (டிச. 8) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, புயல் எச்சரிக்கையால், தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. 

புயலை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் புயலினால்  பாதிக்கப்பட்ட மக்களை  மீட்பதற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வாளர் சந்திப்பு குமார் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் சென்னை அடையாறில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.