அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் – அதிமுகவை 'கழற்றி' விடும் பாஜக?

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய பாஜக, மூன்றாவது முறையும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை தற்போதே பாஜக தொடங்கி வேலை செய்து வருகிறது.

இதற்கிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கும் வகிக்கும் அதிமுக, தற்போது, ஓ.பன்னீர்செல்வம் அணி – எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்டு உள்ளது. அணிகள் மீண்டும் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்.

ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக மேலிடம் விரும்பும் நிலையில், அதிமுக பிளவு, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்லில் இந்த முறை தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று, பாஜக ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி வரும் நிலையில், அதிமுகவின் தலைமை மோதல், பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என, மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இதற்காக இன்று முதலே ஒவ்வொரு நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும்.

அதிமுக பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்னை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாம வாழ்க.. ஓ.பன்னீர்செல்வம் வாழ்க… என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக உடன் கூட்டணி வைப்பதை பொது மக்கள் விரும்ப மாட்டர்கள்.

தமிழகத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பாஜக பெற்றது. அதே போல், எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக தனித்துப் போட்டியிடும். இதை உணர்ந்து அனைத்து நிர்வாகிகளும் பணியாற்ற வேண்டும். பாஜகவின் ஹாட்ரிக் வெற்றிக்காக கடுமையாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.