சென்னை: பொதுமக்கள் அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் நிலவிவரும் ‘மேன்டூஸ்’ புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று (டிச. 9) நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று (நவ.9) அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் அவசியமான காரணங்களுக்காக மட்டுமேப் பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” பொது மக்கள் கவனத்திற்கு மேன்டூஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமேப் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.