குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ராஜினாமா: டிச. 12ல் மீண்டும் பதவியேற்பு..!

ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் வழங்கினார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 156 இடங்களைக் கைப்பற்றியது. குஜராத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வருகிறது. கடந்த 2017ல் 77 இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி,  தற்போது 17 இடங்களில்  மட்டுமே வென்றது. இதனிடையே குஜராத் மாநில தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல், மீண்டும் முதல்வராக தொடர்வார் என்றும், வரும் 12ம் தேதி திங்கள்கிழமை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

அன்றைய பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத்தில் புதிய ஆட்சி அமைக்கும் பொருட்டு முதல்வர் பூபேந்திர படேல் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் முறையாக பதவி ஏற்றார். தற்போது 2-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.