சாதாரண புயலாக மாறும் மாண்டஸ்… ஆனாலும் சென்னை மக்கள் வெளியே வரவேண்டாமாம்! ஏன் அப்படி?

காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரத்தன்மையை இழந்து சாதாரண புயலாக மாறியது. சென்னையிலிருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலானது மாமல்லபுரம் அருகே இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் மற்றும் புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 10 முதல் 15 அடி உயரத்தில் ராட்சத அலைகள் உருவாகியுள்ளன. கடல் நீர் உட்புகுந்துள்ளதால் மீன்பிடி படகுகளை இடம் மாற்றம் செய்யமுடியாமல் தவிப்பதாக மீனவர்கள் கூறிவருகின்றனர்.
மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கவுள்ளதால் அதனை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் இன்று இரவு மட்டும் பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் பகுதியை தவிர்த்து மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்படும் என வருவாய்த்துறை அறிவித்திருக்கிறது.
image
தவிர, தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனின் செய்தியாளர் சந்திப்பை பார்க்கலாம்.
”வடதமிழகம் – புதுச்சேரியை நெருங்கிவருகிறது மாண்டஸ் புயல். இது மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது. இன்று மாலை முதல் நாளை காலை வரை 85 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர பகுதிகளில் மதியம் முதல் காற்றின்வேகம் அதிகரிக்கும். கரையை கடந்த 3 மணிநேரத்தில் புயல் வலுவிழக்கும். டிசம்பர் 10ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக சென்னையில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 7 செ.மீ அளவுக்கு கனமழை பெய்துள்ளது” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.