வங்கக்கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது. மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்க உள்ள சூழலில், காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மிக அவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை, படகு குழாம், சைக்கிள் சவாரி, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்படுகிறது. குணா குகை, பேரிஜம் ஏறி, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் நேற்று முதல் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இன்றிரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம் என தகவல் வெளியான நிலையில் போக்குவரத்து துறை விளக்கம் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பு இருக்கும் இடங்களில் மட்டுமே அந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும். மாண்டஸ் புயல் எதிரொலியால், சென்னையில் கடலை ஒட்டிய, கிழக்கு கடற்கரை சாலையில் மட்டுமே இரவில் பேருந்துகள் இயங்காது எனவும் கூறியுள்ளது.
மாண்டஸ் புயல் – மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த கடல் சீற்றத்தால் நெம்மேலிக்குப்பத்தில் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்தது விழுந்துள்ளது. கடல் அரிப்பால் கோயில் முழுவதுமாக அடித்து செல்லும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.