
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்க உள்ளது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்த தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (Forest Apprentice) (தொகுதி VI) பதவி நியமனத்திற்கான தேர்வு நாளை (டிசம்பர் 10) நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அதே போல், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஓத்த்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
newstm.in