ராகுல், பிரியங்காவுடன் ராஜஸ்தானில் பிறந்த நாள் கொண்டாடிய சோனியா

ஜெய்ப்பூர்: சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால், அவர் ராஜஸ்தானில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது மகனான ராகுல்காந்தி, ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் தனது பிறந்த நாளை சவாய் மாதோபூரில் உள்ள ரந்தம்பூரில் சோனியா கொண்டாடுகிறார்.

அதற்காக நேற்றே ராஜஸ்தான் வந்தடைந்தார். அவருடன் அவரது மகளும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். சவாய் மாதோபூர் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், ‘சோனியா காந்தி நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்’ என்று வாழ்த்தி உள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களும் சோனியா காந்தியின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.