மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தில், 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த எட்டு வயது சிறுவனை மீட்கும் பணி கடந்த 60 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. கடந்த 6-ம் தேதியன்று மாண்ட்வி கிராமத்தில் மாலை ஐந்து மணியளவில் வயல்வெளி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த எட்டு வயது சிறுவன், அங்கிருந்த 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்திருக்கிறான்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தந்தை சுனில் சாஹு, “பண்ணையில் விளையாடிக்கொண்டிருந்த என் மகன், வேறு வயலுக்குச் செல்லும்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். நாங்கள் உடனே அங்கு சென்றோம். அவன் மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். அவன் குரலை நாங்கள் கேட்டோம். பின்னர் மாலை 6 மணியளவில் மீட்புப்பணி தொடங்கியது” என்று கூறினார். ஆழ்துளை கிணற்றிலிருந்து சிறுவனை மீட்கும் விதமாக, ஆழ்துளை கிணற்றுக்கு இணையான சுரங்கப்பாதை தோண்ட மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

மீட்புப்பணி குறித்து ஊடகங்களிடம் பேசிய பெதுல் மாவட்ட கூடுதல் மாஜிஸ்டிரேட் ஷியாமேந்திர ஜெய்ஸ்வால், “சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் 45 அடியை அடைந்து சுரங்கம் தோண்ட இலக்கு வைத்திருக்கிறோம். இப்போது 33 அடி தோண்டியிருக்கிறோம். வழியில் கடினமான கற்கள் இருப்பதால் சிறிது நேரம் ஆகலாம்” என்று தெரிவித்தார். மேலும், மாநில பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை உறுதிசெய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், சிறுவனைப் பத்திரமாக வெளியே கொண்டுவர போதுமான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.