மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. சென்னைக்கு அருகே 180 கி.மீ தொலைவில் வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயல் 12 கி.மீ வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளைக் காலை மாமலப்புரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் சீற்றம்
மாண்டஸ் புயல் நகர்வதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. சென்னை மெரீனா கடற்கரை மற்றும் காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் அலைகள் சீற்றத்துடன் இருக்கின்றன. மேலும், மழையும் பெய்து கொண்டிருப்பதால், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் இல்லை
வெறிச்சோடிய மெரீனா
சென்னை மெரீனா கடற்கரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் இருப்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மரப்பாலம் சேதம்
சீற்றத்துடன் எழும்பி வந்த அலைகளால், அண்மையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஊனமுற்றவர்களுக்காக அமைக்கப்பட்ட மரப்பாலம் சேதமடைந்துள்ளது. உடல் குறைபாடு கொண்டவர்களும் கடல் அலையை ரசிக்க வேண்டும் என்பதற்காக அந்த பாலத்தை அமைத்த தமிழக அரசு, மக்களின் பயன்பாட்டுக்கும் திறந்து வைத்தது. இந்நிலையில், கடலுக்கு அருகே இருக்கும் அந்த பாலத்தின் சிறிய பகுதி இப்போது அலைகளினால் சேதமடைந்துள்ளது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை
மாண்டஸ் புயல் 12 கி.மீ வேகத்தில் நகரந்து கொண்டிருக்கும் நிலையில், அதனுடைய வேகம், மழையின் அளவு உள்ளிட்டவைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. காற்று மற்றும் மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாளை சென்னையில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.