இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மாண்டஸ் புயலின் மையப்பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தை சுற்றிய பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
இதற்கிடையே இன்று காஞ்சிபுர, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் புயல் காரணமாக நேற்றிலிருந்தே மழை கொட்ட தொடங்கியிருக்கிறது. குறிப்பாக இன்று அதிகாலை மழைப்பொழிவு அதிக அளவே இருக்கிறது. இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதேசமயம் அவசர தேவையின்றி மற்ற தேவைகளுக்காக யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.