ஐதராபாத்: தெலங்கானாவில் காதல் விவகாரம் தொடர்பாக படுக்கையறையில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர், 100 பேர் கும்பலால் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் துர்கயாம்ஜல் அடுத்த அடிபட்லா பகுதியை சேர்ந்த மருத்துவர் வைஷாலி (24). இந்நிலையில், இவரது வீட்டுக்கு நேற்று திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடி விட்டு, படுக்கையறையில் இருந்த வைஷாலியை காரில் கடத்தி சென்று விட்டது.
அவர்களை தடுக்க முயன்ற பெற்றோரையும் அந்த கும்பல் கம்புகள், கட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கியது. தகவலறிந்த ரச்சகொண்டா போலீசார், கடத்தப்பட்ட வைஷாலியை அடுத்த சில மணி நேரங்களில் மீட்டனர். இதுகுறித்து ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பக்வத் கூறுகையில், ‘வைஷாலியை கடத்திய கும்பலில் 16 பேரை ைகது செய்துள்ளோம். 6 மணி நேரத்திற்குள் வைஷாலி மீட்கப்பட்டார். தலைமறைவான மற்ற குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் நவீன் ரெட்டி (26) என்பவர், டீ விற்பனை நிலையங்களின் விளம்பரதாரராக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் ெசய்து கொண்டதாகவும், தற்போது வைஷாலியின் பெற்றோர் அவர்களது திருமணத்தை ஏற்க மறுத்துள்ளனர். அதனால் வைஷாலியை நவீன் ரெட்டி கடத்தியுள்ளார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.