திருமண பிரச்சினையில் தம்பதியின் நலனை மேம்படுத்த இந்தியாவில் பொதுவான திருமண சட்டத்தை கொண்டு வருவது கருத்தில் கொள்ளும்படி மத்திய அரசுக்கு கேரள ஐகோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், 28 வயது பெண்ணும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இருவருக்கும் இடையே திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கணவன் – மனைவி இருவரும் விவாரத்து செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த மே மாதம் குடும்ப நீதிமன்றத்தில் ஒன்றாக விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.
இருவரும் மனம் உகந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்த நிலையில், கிறிஸ்தவ மதத்தினருக்கான விவாகரத்து சட்டப்பிரிவு 10 ஏ படி, திருமணமாகி ஓராண்டுக்கு பின்னர்தான் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அப்போது தான் விவாகரத்து விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறி அந்த மனுவை குடும்ப நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இதையடுத்து இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட், இருவரின் சம்மதம் இருந்தபோதும் விவாகரத்து பெற ஓராண்டு நிறைவாகி இருக்க வேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்தது.
மேலும், திருமண பிரச்சினையில் தம்பதியின் நலனை மேம்படுத்த இந்தியாவில் பொதுவான திருமண சட்டத்தை கொண்டுவருவது குறித்து மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மனுதார்கள் குடும்ப நீதிமன்றத்தை அனுகி விவாகரத்து வழக்கை நடத்தலாம் என்றும் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.