வங்க கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பாங்கள் சரிந்து விழுந்தன. மேலும் இந்த மாண்ட்ஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது.
இந்நிலையில் ராமகிருஷ்ணா நகர் அருகே இன்று கடற்கரையில் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது பார்ப்பதற்கு ராட்சத கேஸ் சிலிண்டர் போன்று காட்சியளித்ததால் பயந்து போய் பொதுமக்கள் இதுகுறித்து எண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார் அந்த மிதவையை ஆய்வு செய்ததில், கப்பல்களின் ராட்சத இரும்பு சங்கிலி மூலம் நங்கூரத்தில் கட்டப்பட்டு கடலில் மிதக்கும் மிதவை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.